Healthy Food gives us Healthy life ( Important Aritical ) - Health update - ALL IN ONE PLATFORM

Tuesday, 7 April 2020

Healthy Food gives us Healthy life ( Important Aritical ) - Health update

Healthy food gives us healthy life

Small explanation by R.Darshan

அந்தந்த நாடுகளின், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை, அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம்.

அமெரிக்காவின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஓர் உணவை, இந்தியாவில் சாப்பிட்டால் அது என்ன மாதிரியான விளைவைத் தரும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். இன்னும் எளிமையாக சொன்னால் ஆற்று நீரில் வாழும் மீன், கடல் நீரில் செத்துப் போய் விடும். கடல் நீரில் வாழும் மீனை ஆற்றில் கொண்டு வந்து விட்டால் அதனால் வாழ முடியாது. உணவின், ஆரோக்கியத்தின் அடிப்படை இந்தத் தத்துவம்தான்.

ஆனால் விளம்பர மாயைகளுக்கும், மோசடியான உணவு அரசியலுக்கும் நாம் பலியாகி விட்டோம் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. நம் தேங்காய் ஆபத்து, நம் நிலக் கடலை ஆபத்து, நம் பாரம்பரிய அரிசியால் ஆபத்து என்று இந்திய மண்ணில் விளையும் எல்லா உணவு வகைகளையும் ஆரோக்கியக் கேடு என்று நம்ப வைத்து ஓட்ஸையும், ரீஃபைண்ட் எண்ணெய்களையும் நம் தலையில் கட்டி விட்டார்கள்.

அதே போன்றதொரு மோசடிதான் இந்த சப்பாத்தி மோசடியும். இது தமிழர்களைக் குறி வைத்த வட இந்திய அரசியல் என்று உள்ளூர் லெவலில் புரிந்து கொள்ளலாம். வில்லியம் டேவிஸ் என்ற அமெரிக்க இதய நோய் நிபுணர் ஆரோக்கிய விழிப்புணர்வு தரும் எண்ணற்ற புத்தகங்களை எழுதியவர். இவர் எழுதிய ‘Wheat Belly’ என்ற புத்தகம் பரபரப்பாக பேசப்பட்டு, விற்பனையில் புதிய உச்சத்தை சமீபத்தில் எட்டிப் பிடித்திருக்கிறது. கோதுமை ஒரு விஷம் என்பதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம்.

“இதய நோய்களுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சைகளை செய்து வருபவன் நான். என்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் படும் துயரங்களைப் பார்த்து மிகுந்த வேதனைப் பட்டிருக்கிறேன். ஆஞ்சியோப்ளாஸ்டி என்பது இதய நோய்க்காக செய்யும் ஒட்டு வேலைதான் என்பதை கொஞ்ச நாளிலேயே உணர்ந்து கொண்டேன். அதனால், இதற்கான மூலகாரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று முடிவு செய்தேன். முக்கியமாக, என்னுடைய அம்மாவே மாரடைப்பால் இறந்தது எனக்கு மிகப் பெரிய துக்கத்தைக் கொடுத்தது. அதனால், கடந்த 15 வருடங்களாக இதய நோய் சம்பந்தமான ஆராய்ச்சியிலேயே முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இத்தனை வருட ஆய்வின் பலனாக உருவானதுதான் நான் எழுதிய ‘Wheat belly’ எனும் புத்தகம்” என்று தன் புத்தகம் பற்றிக் கூறுகிறார் டேவிஸ். ‘நோய்களை உருவாக்குவதில் கோதுமையின் பங்கு முக்கியமானது என்பது தெரிந்து அதிர்ந்து போனேன்’ என்று டேவிஸ் கூறுவதுதான் இதில் ஹைலைட்.

“நம்மில் பெரும்பான்மையோர் இன்று சந்திக்கும் முக்கிய நோய்களான நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு மூலகாரணமாக இருப்பது நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கோதுமை,கோதுமையிலிருந்து தயாராகும் மைதா, ரவை . நம் உணவிலிருந்து கோதுமையை நீக்கி விட்டால் நம் வாழ்க்கையே மாறி விடும். கோதுமை, உங்கள் ரத்த சர்க்கரை அளவை ஆச்சர்ப்படும் வகையில் அதிகரிக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடை குறைக்கவும் கோதுமை பிரட் சாப்பிடலாம் என நினைக்கிறோம். உண்மையில் 2 ஸ்லைஸ் கோதுமை பிரட், ஒரு சாக்லேட் பாருக்கு இணையானது. கோதுமை சாப்பிடாத நோயாளிகளின் உடல் எடையில் ஒரு மாதத்துக்கு உள்ளாகவே மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.

என்னிடம் வரும் நீரிழிவு நோயாளிகளில் 80 சதவீதத்தினர் கோதுமை உணவை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். அவர்களை கோதுமையைத் தவிர்க்கச் செய்து சோதித்ததில் 6 மாதங்களுக்குப் பிறகு அவர்களிடத்தில் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறைந்ததை உணர்ந்தனர். இதுமட்டுமல்ல, பல நோயாளிகள் தங்கள் கோதுமை அனுபவங்களையும் கூறியது கேட்டு வியந்துபோனேன். ‘கோதுமை சாப்பிடுவதை நிறுத்திய பின் என்னுடைய இன்ஹேலர்களை தூக்கி எறிந்து விட்டேன்’ என்று ஒரு ஆஸ்துமா நோயாளி கூறினார். ‘15 வருடங்களாக மைக்ரேன் தலைவலிக்காக மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மூன்றே நாட்களில் வலி போய் விட்டது. மருந்துகளை நிறுத்திவிட்டேன்’ என்றார் ஒருவர்.‘20 வருடங்களாக நெஞ்செரிச்சலால் அவதிப்பட்டேன். கோதுமையை நிறுத்திய பிறகு நிம்மதியாகத் தூங்குகிறேன்’ என்பது இன்னொருவரின் வாக்குமூலம்.

இதே போல கோதுமை உணவைத் தவிர்த்ததால் மூட்டு வலி, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களிலிருந்தும் தாங்கள் விடுபட்டதாக பல நோயாளிகள் என்னுடைய ஆய்வில் சொல்ல ஆரம்பித்தனர். ‘க்ளூட்டனைத் தவிர Gliadin, Amylopectin என உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களும் கோதுமையில் இருக்கிறது. ‘Gluten Free’ என்று அச்சிடப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில், அதற்கு பதிலாக சேர்க்கப்படும் பதப்படுத்திய சோள மாவு, அரிசி மாவு மற்றும் உருளைக்கிழங்கு மாவுகள் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடியவை. இந்தப்பொருட்களும் தவிர்க்கப்பட வேண்டியவையே’’ என்கிறார் வில்லியம் டேவிஸ்.

உணவியல் நிபுணர் லஷ்மியிடம் இந்த கோதுமை சர்ச்சை பற்றிக் கேட்டோம்...“கோதுமை பற்றிய பெரிய மாயையை உடைத்திருக்கிறது வில்லியம் டேவிஸின் ஆராய்ச்சி. இதில் யாருக்குப் பலன் இருக்கிறதோ இல்லையோ, தமிழர்களுக்கு நல்ல பாடம் இருக்கிறது. தென்னிந்தியாவின் சீதோஷ்ண நிலைக்கு, நம் மண்ணில் விளையும் பாரம்பரிய அரிசி உணவுகளே ஆரோக்கியமானவை என்பதை இதன் மூலம் அழுத்தமாகப் புரிந்துகொள்ளலாம். அரிசியில் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளைத்தான் நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் தீட்டப்படாத அரிசி உணவே மிகவும் சிறந்தது.

கோதுமையில் இருக்கும் ஒரே நல்ல விஷயம், அதன் நார்ச்சத்து காரணமாக சப்பாத்தியைக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நம்மால் சாப்பிட முடியும் என்பதுதான். வட இந்தியர்கள் கோதுமையை பிரதான உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவர்களின் தட்பவெப்ப நிலையையும், மரபணுக்கள் அமைப்பையும் பொறுத்தது. பாரம்பரிய கோதுமையில் இந்த தாக்கம் இல்லை. ஆனால் இது பயிரிடப்படுவது அரிது. இயன்றவரை விலை அதிகமானாலும் சம்பா நாட்டு கோதுமை வாங்கி மெஷினில் கொடுத்து அரைத்து உபயோகிக்கலாம்” என்கிறார்.

No comments:

Post a Comment